ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கி 776 ரன்களை விளாசி ‘ஆரஞ்சு கேப்’ வென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. இவரது இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்த போதிலும், பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி என மூன்று போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடக்கவுள்ளது.
இந்த சூழலில் வைபவ் சூர்யவன்ஷி எழுதியுள்ள பதிவு ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “New chapter” என்ற ஒற்றை வார்த்தையை பதிவிட்டுள்ளார். புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது என்று இந்திய அணிக்கான அறிமுகத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளன.
வழக்கமாக ஒவ்வொரு போட்டியின் போது அன்றைய நாள் காலையில் வானிலை குறித்த தகவலை அறிந்த பின்னரே இந்திய அணி நிர்வாகம் பிளேயிங் லெவனை முடிவு செய்யும். இதன்பின் வீரர்களிடம் முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப பயிற்சிகளை தொடங்குவார்கள். இதனால் இந்திய அணி அறிமுகம் குறித்து வைபவ் சூர்யவன்ஷியிடம் முறையாக தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இன்று இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் களமிறக்கப்பட்டால், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார். இந்திய ஆடவர் கிரிக்கெட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் அறிமுகமானதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
மகளிர் கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மா 15 வயதில் அறிமுகமாகி இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்த பேச்சுகள் உலகம் முழுவதும் அதிகரித்தன. குறிப்பாக இங்கிலாந்து ஜாம்பவான்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக இருப்பதை வெளிப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து ஒளிபரப்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

