சாகுற வரை சிறைதான்!” – நாகர்கோவில் காசி வழக்கு.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம். நூற்றுக்கணக்கான பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசியின் வாழ்நாள் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. மேலும், காதல் மற்றும் பாசம் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் பெண்கள் தங்கள் அந்தரங்கப் படங்களை இணையவழியில் பகிரக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிப் பணம் பறித்த புகாரில் சிக்கிய நாகர்கோவில் காசி என்கிற சுஜிக்கு, விசாரணை நீதிமன்றம் விதித்த “வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறைத் தண்டனையை” உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், நவீன டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவுரைகளையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த முழுமையான விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க : 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை – மனைவியின் வீட்டில் நடந்த சோகம்
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு;
இந்தத் தண்டனையை எதிர்த்து காசி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காசியின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, “இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய வாழ்நாள் ஆயுள் தண்டனையில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட காசி மீதான குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு காதல் மோசடி. பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்ச்சிப்பூர்வமான பலவீனத்தையும், பொருளாதாரத் தேவைகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தி இந்த கொடூரப் பாலியல் சுரண்டல் அரங்கேற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோள்:
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தங்களது தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதியை வழங்கினர். டிஜிட்டல் உலகில் வாழும் இளம்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை, “பாசம், காதல், நம்பிக்கை எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் சரி, அல்லது அந்தப் படங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று எவ்வளவுதான் உறுதியளிக்கப்பட்டாலும் சரி… தங்களது
புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ மின்னணு சாதனங்கள் வழியாக யாருடனும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, சமூக ஊடகங்கள் வழியாகப் பெண்களைத் தொடர்பு கொண்டு, அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுடன் பழகி அந்தரங்கமாக ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் நாகர்கோவில் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் காசி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட பெண்களின் 400-க்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கைப்பற்றி போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிக்க: சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..
விசாரணை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம், காசிக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவர் “இயற்கை மரணம் அடையும் வரை (வாழ்நாள் முழுவதும்) சிறையில் இருக்க வேண்டும்” என்று ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

