ஆட்டோகிராப் போட்ட முதல்வர்.எப்படியாவது முதலமைச்சர் விஜய்யை நேரில் ஒருமுறையாவது சந்தித்துவிட மாட்டோமா, அவருடன் ஒரு செல்பியாவது எடுத்துக்கொள்ள மாட்டோமா என்று இளைஞர்கள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் நடந்துகொள்வது, தற்போதைய அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது…
நடிகர் விஜய் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே தனது ரசிகர்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்.. முக்கியமாக செல்பி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்..
விஜய் செல்பி
நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட், வாரிசு இசை வெளியீட்டு விழா,’ ஜனநாயகன் போஸ்டர் வெளியீடு, தவெக பிரச்சாரக் கூட்டங்கள் இப்படி இன்னும் எத்தனையோ தருணங்களில் செல்பி வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்… இந்த பழக்கம் அவர் முதலமைச்சராக பதவியேற்றும் தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த மே 19ம் தேதி காலை முதலமைச்சர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அந்த நேரத்தில் குழு உறுப்பினர்கள் தவிர அந்த ரூமில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முதலமைச்சர் விஜய் செல்பி
அப்போது அதிகாரி ஒருவர் செல்ஃபி வீடியோ எடுக்க முற்பட்டபோது, அவரைத் தடுக்க வேண்டாம் என அங்கிருந்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. மாற்றுத் திறனாளிகளின் இதுபோன்ற சின்ன சின்ன விருப்பங்களை நிறைவேற்றுவதே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கருதியதாலேயே விஜய், அந்த அதிகாரியைத் தடுக்கவில்லை என கருதப்படுகிறது. அந்த அதிகாரி எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது நினைவிருக்கலாம்.
நேற்றைய தினமும், சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பேருந்து பணிமனையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பணிமனையின் செயல்பாடுகள், அங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்கள் தேவை குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
ஆய்வுகளை மேற்கொண்டபோது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்கள் சிலர், முதலமைச்சருடன் செல்பி எடுக்க விருப்பம் தெரிவித்து கோரிக்கை விடுத்தனர்… உடனே அந்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் விஜய், அவர்களை அருகில் நிற்க வைத்து செல்பி எடுத்துக்கொண்டார்.
மருத்துவ பணி நியமன ஆணைகள்
அங்கிருந்த ஊழியர்களும், பொதுமக்களும், முதலமைச்சர் தங்களிடம் நெருங்கி வந்து சகஜமாக பழகியது, செல்பி எடுத்துக் கொண்டதை, தங்களது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
இதேபோன்ற மற்றொரு நெகிழ்ச்சியான நிகழ்வு, இன்றைய தினம் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவிலும் அரங்கேறியது.
மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.. அத்துடன் பல்வேறு அரசுப் பணிகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, ஆர்வம் மிகுதியால் பெண் டாக்டர் ஒருவர் முதலமைச்சரிடம் ஆட்டோகிராப் வேண்டும் என்று கேட்டார்…
ஆனால் அப்போது முதலமைச்சரிடம் பேனா இல்லை. உடனே அந்த பெண் டாக்டரிடமே பேனா கேட்டார். அவரும் தனது பையில் இருந்து எடுத்து கொடுக்க, பணி ஆணையின் பின்புறத்தில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்… அந்த பெண் டாக்டரும் மகிழ்ச்சியுடன் மேடையைவிட்டு கீழே இறங்கி சென்றார்..
தான் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகச் செல்பிகள் எடுத்து மகிழும் முதலமைச்சர் விஜயின் அணுகுமுறை, அவரை ஒரு மக்கள் தலைவராக அடையாளப்படுத்துவதாக தவெக நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்து வருகிறார்கள். பதவிகள் மாறினாலும், மக்களுடனும் ரசிகர்களுடனும் நேரடித் தொடர்பில் இருந்து வருகிறார் என்பதையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

