அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக – அதிமுக களவாணிகளா? இல்லை அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நான்கு கால்கள்தான் இருந்தால்தான் நாற்காலி நிற்கும். ஆனால், விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால் என்றும் எடப்பாடி பழனிசாமி உவமையுடன் பேசியிருக்கிறார்.
கரூர் வந்த முதல்வர் விஜய், அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள் என கூறியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக – திமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. திமுக எதிர்ப்பில் உறுதியாக இக்கிறோம். திமுக தீய சக்தி என்ற நிலைப்பாடுதான் எனக்கும். திமுக தீய சக்தி என்று கூறித்தான் எம்ஜிஆர் கட்சித் தொடங்கினார். அந்த நிலைப்பாட்டில் இப்போதும் மாற்றமில்லை.
தவெக ஆட்சியமைத்து 60 நாள்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த அரசு செய்தது என்ன? சிங்கப்பெண் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவில் ஒரு பிரச்னை நடந்தால், அங்கு வரும் சிங்கப் பெண் அதிரடிப்படையினருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகக் குரல் கொடுப்பது அதிமுக.
காவிரி நீருக்காக தீர்ப்பை பெற்றது அதிமுக. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேக்கேதாட்டு அணைக் கட்டுப்படுகிறது.
கரூரில் முதல்வர் விஜய் பேசியது மிகவும் மோசமானது. முதல்வரின் அந்துஸ்துக்கே முதல்வர் விஜய் இன்னமும் வரவில்லை. அதிமுக சின்னத்தில் வென்றவர்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி என்றும் கூறினார்.
முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் நாற்காலியின் ஒரு கால் இரவல் கால். மாற்று கட்சியில் போட்டியிட்டு வென்றவர்களின் ஆதரவுடன்தான் விஜய் ஆட்சியமைத்துள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

