போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து கணவன் மனைவி உயிரிழப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தகவல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரகுமார் வயது (42), அவரது மனைவி சிந்து வயது (38) ஆகியோர் அதிகாலை 4 மணி அளவில் நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த ரயில் எண் 17291 முன் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்திரகுமார் நீண்ட நாட்களாக நுரையீரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சித்ரா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று வேலூருக்கு சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

