ராஜஸ்தான், குஜராத்தில் ரூ.1.13 லட்சம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்திற்கான 530 கிலோமீட்டர் நீள மின் பரிமாற்ற அமைப்பிற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்குகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டு, ரூ.1.13 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்தில் ரூ.480 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த முனையத்துடன், விமான இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட உடான் (Modified UDAN) திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்:
பாலோத்ராவில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுமார் ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பெட்ரோ இரசாயனம், ரயில்வே, சாலை, நகர்ப்புற போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பசுமை சுத்திகரிப்பு வளாகம், மெட்ரோ திட்டம்:
பச்ச்பத்ராவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பசுமை நிலப்பரப்பு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ இரசாயன வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். HPCL மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ரூ.79,450 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இந்த வளாகத்தை அமைத்துள்ளன.
மேலும், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் செயல்படுத்தப்படும் ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதன் கீழ் 41 கிலோமீட்டர் நீளத்தில் 36 நிலையங்களுடன் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.
சூரிய மின், ரயில் மற்றும் வேலைவாய்ப்பு:
1,000 மெகாவாட் திறன் கொண்ட பிகானேர் சூரிய மின் திட்டம், மின் பரிமாற்றத் திட்டங்கள், ரயில் பாதை இரட்டைப்படுத்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அத்துடன், ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.
குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை திறப்பு:
மாலை நேரத்தில் குஜராத்தின் சானந்த் பகுதியில் ரூ.7,500 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள CG Semi நிறுவனத்தின் OSAT செமிகண்டக்டர் உற்பத்தி நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இந்தியா செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் முதல் முழுமையான சிப் பொதியிடல் மற்றும் சோதனை மையங்களில் ஒன்றாகும்.
முழுத் திறனில் செயல்படும்போது ஆண்டுக்கு 500 கோடி செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்யும் திறன் இந்த ஆலைக்கு இருக்கும். செயற்கை நுண்ணறிவு (AI), 5ஜி, வாகனத் தொழில், தொழில்துறை தானியக்கம் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உள்ளிட்ட துறைகளின் உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த உற்பத்தி நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

